புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது: இந்தியாவில் தேர்தல் நடத்துவது மிகப் பெரிய பட்ஜெட் விவகாரம். அடிக்கடி தேர்தல் நடத்துவதால் அரசு பணம் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது. ஆட்சியில் ஸ்திரத்தன்மைக்காக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த சட்ட ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் மக்களின் வரிப்பணம் சேமிக்கப்படும். அரசுபணம் மிச்சமாவது மட்டுமின்றி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவும் குறையும்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல்களால் மாதிரி நடத்தை விதிகளை நீண்ட காலம் அமல்படுத்தப்பட வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் ஏற்படுகிற பாதகமான விளைவுகளை ஒரே நேர தேர்தல் கட்டுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
1951-52, 1957, 1962, 1967-ம் ஆண்டுகளில் மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டன. எனினும், 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் சில மாநில சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் சுழற்சி சீர்குலைந்தது என்பது குறிப்பிடத்ததக்கது.
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 17 ஆண்டுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன்
» "மேட் இன் பாகிஸ்தான்" தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்