திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் திருப்பாவை

By என். மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதில், அதிகாலை ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை திருப்பள்ளி எழுச்சியாக பாடப்பட உள்ளது.

நேற்று மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் பிறந்ததால், இன்று முதல் திருப்பாவை சேவை அமல்படுத்தப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்பட்டு, தை மாதம் 1-ம் தேதியான ஜனவரி மாதம் 15-ம்தேதி முதல் வழக்கம் போல் சுப்ரபாதம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசனம் மார்க்கமாக சென்று தரிசிக்க நேற்று 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். ஏழுமலையான் கோயிலில் கடந்த வியாழக்கிழமை மொத்தம் 63,549 பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். திருமலையில் உள்ள தர்மகிரி பகுதியில் கடந்த 138 ஆண்டுகளாக வேதபாட சாலை செயல்பட்டு வருகிறது. இதே பள்ளியில் கடந்த 1960-ம் ஆண்டில் படித்த தமிழகத்தை சேர்ந்த தற்போதைய திருமலை திருப்பதி தேவஸ்தான பெரிய ஜீயர் சடகோபன் ராமானுஜ ஜீயர் உள்ளார்.

இந்த வேத விக்ஞான பீடத்தில் 128-வது பட்டமளிப்பு விழா நேற்று பெரிய ஜீயர் தலைமையில் பிரம்மாண்டமாக நடந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலால் நடைபெறாத பட்டமளிப்பு விழா, இந்த ஆண்டு 2 ஆண்டுக்கும் சேர்த்தே நடந்தது. 113 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE