இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100வது நாள் | ராகுலுடன் இணைகிறார் இமாச்சல பிரேதச முதல்வர்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை 100வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று இமாச்சல பிரதேச முதல்வர், துணை முதல்வர், எம்எல்ஏ.,க்கள் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியன்று இந்த யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து யாத்திரையை தொடங்கிவைத்தார். இந்நிலையில் ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தானில் யாத்திரையில் உள்ளார். யாத்திரை 100வது நாளை எட்டியுள்ளது. இன்றைய யாத்திரையில் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்வீந்த சிங் சுக்கு, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பங்கேற்பர் எனத் தெரிகிறது.

இது குறித்து இமாச்சல் பிரதேச காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ராஜஸ்தானில் இன்று நடைபெறும் யாத்திரையில் ராகுல் காந்தியுடன் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் எம்எல்ஏ.,க்கள் பங்கேற்பர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கிய மூன்று மாதங்களில் ராகுல் காந்தி தமிழகம் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது ராகுல் ராஜஸ்தானில் யாத்திரையில் உள்ளார்.

நடந்து முடிந்த இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இமாச்சலப் பிரதேச தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்நிலையில், இன்றைய யாத்திரையில் இமாச்சலப் பிரதேச முதல்வர் பங்கேற்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE