பிஹாரில் கள்ளச்சாராய பலி 39 ஆக அதிகரிப்பு: கடும் நடவடிக்கைக்கு முதல்வர் நிதிஷ் உறுதி

By செய்திப்பிரிவு

பாட்னா: கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பிஹாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. பிஹாரில் கடந்த 2016 முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. எனினும், அங்கு கள்ளச்சாராய வியாபாரத்தில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிஹாரின் முன்னாள் துணை முதல்வர் சுசில் மோடி, "கடந்த 6 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் குடித்து 1,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்றதாக 6 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், "பிஹாரில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பலர் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். மதுவிலக்கால் ஏராளமான மக்கள் பலனடைந்துள்ளனர். எனினும், பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அத்தகையவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறேன்.

ஏழைகளைக் கைது செய்யாதீர்கள். மாறாக, கள்ளச்சாராயத்தை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களை கைது செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறேன். கள்ளச்சாராய தொழிலில் இருப்பவர்கள் வேறு தொழிலுக்கு மாற ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் கொடுக்க அரசு தயாராக இருக்கிறது. இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டுமானால், அதையும் அரசு பரிசீலிக்கத் தயார். ஆனால், யாரும் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபடக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கலால் வரித் துறை அமைச்சர் சுனில் குமார், "இந்த துயரச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

பிஹாரில் கள்ளச்சாராய உயிரிழப்பை அடுத்து, அந்தப் பகுதியின் காவல் நிலைய அதிகாரி ரிதேஷ் மிஸ்ராவும், காவலர் விகேஷ் திவாரியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை உயரதிகாரி யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE