டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் மேலும் இரண்டு பேரின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவரை ஆறு பேர் சேர்ந்து ஓடும் பஸ்ஸில் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவரை தூக்கி வெளியே வீசினர். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ஒரு சிறார் குற்றவாளி மற்றும் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்சிங் தவிர, மற்ற நான்கு பேருக்கும் விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 13-ம் தேதி உறுதி செய்தது.
சிறார் குற்றவாளி மீது வழக்கு தொடரப்பட்டு சிறார் நீதி வாரியம் முன்பு விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு அதிகபட்ச தண்டனையான மூன்று ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இதில் முகேஷ், பவன் குப்தா ஆகிய இருவரது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிறுத்தி வைத் துள்ளது. இந்நிலையில், வினய் சர்மா, அக்சய் தாகூர் ஆகிய மற்ற இருவரும் தங்களது தண்டனை யையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினர்.
இந்த மனு நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே இதே வழக்கில் இருவரது தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அதே உத்தரவு இவர்கள் இருவருக்கும் நீட்டிக்கப்படலாம் என்று கூறி, தூக்கு தண்டனையை நீதிபதிகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.