தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசுக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே "யர்கோல்" எனுமிடத்தில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை கடந்த 2019-ம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக முதலில் மத்திய அரசை அணுகுமாறு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க தாமதமானதைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். உரிய தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கவும், நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை கடந்த 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, "நடுவர் மன்றம் அமைப்பது குறித்து மத்திய நீர் ஆணையக் குழு கூடி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளதாக தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் கடந்த நவமபர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில், "இந்த விவகாரத்தில் சமரசக்குழு மூலம் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. எனவே, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதுவரை ஏன் நடுவர் மன்றம் அமைக்கவில்லை? வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் அதுகுறித்து சிந்திப்பீர்களா? நதிநீர் விஷயங்களை அரசியலாக்காதீர்கள். இன்னும் எத்தனை நாள்கள்தான் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்கள் நிலுவையிலே இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?” என மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “ஒவ்வொரு முறையும் கால அவகாசம் கேட்கிறீர்கள். இப்படியே செய்தால் 10 ஆண்டுகள் ஆனாலும் தீர்வு கிடைக்காது" என நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.

அப்போது மத்திய அரசு தரப்பில், "நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் அமைத்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட நான்கு வாரங்கள் தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், இந்த நதி நீர் பங்கீடு விவகாரத்தில் 2 முறை மட்டுமே சமரச குழு கூடியது. அதிலும் முடிவு எட்டப்படவில்லை. எனவே நடுமன்றம்தான் தீர்வு. அதனை விரைந்து அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசுத் தரப்பில், சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நான்கு வாரத்தில் நடுவர்மன்றம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவாதத்தை பதிவு செய்துகொண்டு வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில், "தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அந்த பணிகளை முடிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தீர்பாயத்தை மூன்று மாத காலத்தில் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை 2023-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE