விபத்தில் உயிரிழந்த சிறுமியின் கண் தானம்; உடலை ஆய்வுக்கு அளித்த உறவினர்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விபத்தில் உயிரிழந்த சிறுமியின் கண்களை தானம் செய்த உறவினர்கள், சிறுமியின் உடலை கான்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிமித்தமான பயன்பாட்டுக்காக வழங்க முன்வந்துள்ளார்.

9-ஆம் வகுப்பு படித்து வந்தார் மாணவி வன்ஷிகா மிஸ்ரா. இவர் படிப்பில் கெட்டிக்காரராக திகழ்ந்து வந்தார். இவரும் இவரது நெருங்கிய தோழி மான்வியும் எப்போதும் சேர்ந்தே தான் பயிற்சி வகுப்பு செல்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அதுபோலவே இருவரும் சென்றுள்ளனர். பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மிகவும் பரபரப்பான பாஸ்சிம் விஹார் பகுதியில் உள்ளது.

இந்நிலையில், அன்று வன்ஷிகாவும், மான்வியும் சாலையில் நடந்து சென்றபோது வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் மான்வியும், வன்ஷிகாவும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.

இணைபிரியாத தோழிகள் இறப்பிலும் ஒன்றாகவே சென்றுவிட்டனர் என அப்பகுதி மக்கள் உருக்கமாக தெரிவித்தனர். இந்நிலையில், வன்ஷிகாவின் உறவினர்கள் அவரது கண்களை தானமாக வழங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் வன்ஷிகாவின் முழு உடலையும் கான்பூர் மருத்துவமனைக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டுக்காக வழங்கியுள்ளனர். இதையும் அக்கம்பக்கத்தினர் பாராட்டியுள்ளனர்.

எப்போதும் துருதுருவென இருக்கும் வன்ஷிகா இனியும் உலகத்தை யார் மூலமாவது பார்த்துக் கொண்டிருப்பார் என்றனர். மேலும் வன்ஷிகாவின் உறவினர்கள் செயல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதாகக் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE