மோர்பி பால விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ.10 லட்சமாக உயர்வு

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் ஓடும் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு நடை பாலம் இருந்தது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி இந்த பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் ரூ.4 லட்சமும் மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்தோருக்கான இழப்பீட்டை ரூ.10 லட்சமாக அதிகரிக்குமாறு ஆலோசனை கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மோர்பி பால விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநில முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.8 லட்சமும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் வழங்கப்படும்” என உறுதி அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE