புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமத்தில் தமிழ்ப் படங்கள் திரையிடப்படுகின்றன. நேற்று முதல் படமாக விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரையிடப்பட்டது.
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் கடந்த மாதம் 17-ல்தொடங்கியது. இங்கு தமிழகத்திலிருந்து வருபவர்களும், உள்ளூர்வாசிகளும் கண்டுகளிக்கும் வகையில் நேற்று முதல் தமிழ்ப் படங்கள் திரையிடப்படுகின்றன. சங்கமம் நடைபெறும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மைதானம் அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக அரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடப்படுகின்றன. அந்த வகையில், முதல் படமாக விஜய் சேதுபதி நடித்த, ‘மாமனிதன்’ நேற்று திரையிடப்பட்டது. இந் நிகழ்ச்சிக்காக, அப்படத்தின் இயக்குநரும் நவீன இலக்கியக் கவிஞருமான சீனு ராமசாமி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாவது: எளிய மக்களின் ஆன்மீகம் என்பது என்னவெனில், தம் சந்ததிகளுக்கு புண்ணியத்தை ஈட்டி தந்துவிட்டுச் செல்வதுதான். அதனால்தான் ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கு வந்து கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்காமல் செல்வதில்லை. அதுபோல, என் படத்தின் கதாநாயகன் காசிக்கு வந்து தன் வீட்டிற்கு திரும்பாமல் தங்கி விடுகிறான். இங்குள்ள மடங்களில் வேலை செய்தபடி இருக்கிறான்.
அதற்கான காரணத்தை கேட்டால், வேலை செய்து குடும்பத்திற்கு பணம் அனுப்பினால் மட்டும் போதாது, புண்ணியத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என்று கூறுகிறான். இந்த புண்ணியம்தான் தனது குழந்தைகளை காக்கும் என்று அவன் நம்புகிறான். அந்தஅளவிற்கு காசி என்பது ஒரு புண்ணிய பூமியாக பாமர மக்கள் மனதிலும் பதிந்திருப்பதை எனது படம்எடுத்துரைக்கிறது. இதை யதார்த்தமாகக் காட்டும் படம் என்பதால் மாமனிதன் காசியில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரிய இலக்கிய நூல்கள்: எனது மாமனிதன் படத்தை பார்த்த உள்ளூர்வாசிகள் மொழி தெரியவில்லை என்றாலும், கண்ணீருடன் என்னை பாராட்டியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
பொருட்காட்சி அரங்கில் தமிழகத்திலுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நூலரங்கை பார்த்து பிரமித்து விட்டேன். அதன் சார்பில் பல அரிய இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் நூல்கள் மொழிபெயர்த்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த சங்கமம் நிகழ்ச்சியில் நாளை சிவாஜிகணேசன் நடித்த கர்ணன், மறுநாள் திருவிளையாடல் உள்ளிட்ட திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.
பாஜகவுக்கு இழுக்க முயற்சியா?
பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘நான் கடவுள்’ எனும் திரைப்படத்தின் பல காட்சிகள் காசிஎனும் வாரணாசியில் படம்பிடிக்கப் பட்டன. அதுபோல், கமல்ஹாசனின் மகாநதி, இந்தி மற்றும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி, கன்னடத்தில் எடுத்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பனாரஸ் உள்ளிட்ட பல படங்களில் வாரணாசியின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், காசி தமிழ் சங்க மத்தில் மாமனிதன் படத்தை மட்டும் தேர்வு செய்து திரையிட்டமைக்கு அதன் கதாநாயகன் விஜய் சேதுபதியை, பாஜகவின் பக்கம் இழுக்கும் முயற்சியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நாளை மறுதினம் நிறைவு விழா: நாளை மறுதினம் டிசம்பர் 16-ம் தேதியுடன் காசி தமிழ் சங்கமம் முடிவு பெறுகிறது. இதன் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அவருடன் மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.