100-வது நாளை நெருங்கும் இந்திய ஒற்றுமை யாத்திரை - சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் திட்டம்

By செய்திப்பிரிவு

ஷிம்லா: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் 16-ம் தேதி 100-வது நாளை எட்ட உள்ளது. அன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்ட்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக நடைபயணம் சென்று தற்போது ராஜஸ்தானில் தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100-வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, 100-வது நாளான வரும் 16-ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகர் சுனிதி சவுஹான் தலைமையிலான இசைக் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை அளிக்க இருக்கின்றனர். இதனை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த 100-வது நாள் யாத்திரையில், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்திய ஒற்றுமை யாத்திரை மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருதாகத் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் நமோநாராயண் மீனா, இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பொய்களை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். ராஜஸ்தானில் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற உள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை, வரும் 21-ம் தேதி ஹரியாணாவுக்குச் செல்ல இருக்கிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE