கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவியின் ரூ.27 லட்சம் கடனை செலுத்தி வீட்டை மீட்டுக்கொடுத்த பூனாவாலா

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்தவர் வனிஷா பதக். 10-ம் வகுப்பு பள்ளி மாணவியான இவரது தாய் தந்தையர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து ஆதரவற்ற நிலையில் இருந்தார். இருந்தபோதிலும் படிப்பில் மிகவும் திறமைசாலியான வனிஷா கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வில் 99.8% மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில்தான் பேரிடியாக, தவணை கட்டாததால் அவருடைய வீட்டை கையகப்படுத்த நிதி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதில் கடிதம் எழுதிய வனிஷா தன்னுடைய நிலையை விளக்கி, கடனை கட்டுவதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரியது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து நூற்றுக்கணக்கானோர் வனிஷாவுக்கு உதவ முன் வந்தனர். சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலா உட்பட பலர் வீட்டுக் கடனை அடைக்க முன்வந்தனர். ஆனால், வனிஷாவுக்கு அப்போது 18 வயது ஆகாததாலும், சட்டப்பூர்வ பாதுகாவலர் இல்லாததாலும் இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல் ஏற்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுக்குமாறு வீட்டுக்கடன் பெற்ற எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் வனிஷாவுக்கு 18 வயது பூர்த்தியானதையடுத்து சீரம் நிறுவன தலைவர் பூனாவாலா தனது அறக்கட்டளையிலிருந்து வனிஷாவுக்கு வீட்டை மீட்பதற்காக ரூ.27.4 லட்சத்தை வழங்கினார்.

‘‘கரோனாவுக்கு பெற்றோர் இருவரையும் பறிகொடுத்த எனக்குகடன் சுமையிலிருந்து விடுவித்ததுடன், எனது தந்தையின் கனவு இல்லத்தை மீட்டுக் கொடுத்ததற்காவும் பூனாவாலாவுக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்’’ என வனிஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE