புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மகாபரிநிர்வாண் தினத்தில், பாபாசாகேப் அம்பேத்கர் நமது நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தது. மிக விரிவான அரசியல் சாசனத்தை இந்தியாவுக்கு அளிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஒருபோதும் மறக்க முடியாதவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.