புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் அளித்தால், அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சுனில் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் 2019-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் குறைபாடு குறித்து பலர் புகார் அளிக்கின்றனர். விசாரணையில், அவர்களது புகார் பொய் என்று தெரியவந்தால், சட்டப்பிரிவு 49எம்ஏ-படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, புகார்தாரருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுகிறது.
இதனால், பலர் புகார் அளிக்கத் தயங்குகின்றனர். 49-எம்ஏ பிரிவு சட்டவிரோதம். அந்தப் பிரிவை நீக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அஜய் ரஸ்தோகி, நீதிபதி பேலா திரிவேதி அமர்வு முன்னிலையில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது. மனுதாரரிடம் வெளிப்படையாக ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறோம். குறிப்பிட்ட சட்டப் பிரிவில் என்ன தவறு இருக்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரத்தில் குறைபாடு இருப்பதாக யாராவது பொய் புகார் அளித்தால், அதற்கான பின்விளைவுகளை அவர் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். எனவே, அதுகுறித்து அவர் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
யார் புகார் அளிக்கிறார், யார் விசாரணை நடத்துகிறார், அந்த புகார் உண்மையா, பொய்யா என்பதெல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடியும். குறிப்பிட்ட சட்டப்பிரிவை ஆய்வு செய்வது அவசியமற்றது என்றே கருதுகிறோம். எனினும், மனுதாரர் தனது பிரச்சினைகளை விரிவான மனுவாக எழுதி, சமர்ப்பிக்க உத்தரவிடுகிறோம். வழக்கு பின்னர் விசாரிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
மும்பை ஐஐடி தொழிலக வடிவமைப்புத் துறையினர், முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வடிவமைத்தனர். கடந்த 1989-ல் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இந்திய மின்னணு கழகத்துடன் இணைந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் தயாரிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.