புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் தற்போது கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலீஜியம் அளிக்கும் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமித்து வருகிறது. அதே நேரத்தில் கொலீஜியத்தின் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (என்ஜேஏசி) மத்திய அரசு கொண்டு வந்தது. இதில், புதிய நீதிபதிகளை நியமிப்பதில் நீதித் துறைக்கும் அரசுக்கும் சம அளவிலான முக்கியத்துவம் இருக்கும்படி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. எனினும், இந்த ஆணையத்தை கடந்த 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதும் கொலீஜியம் முறையிலேயே நீதிபதிகள் நியமனம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பம்பாய் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பதவிகளுக்கு 10 பேர் அடங்கிய பட்டியலை கொலீஜியம் அண்மையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பியது. இதில் 2 பேருக்கு மட்டும் நீதிபதி பதவியை வழங்கிய மத்திய அரசு, மற்ற 8 பேரையும் நிராகரித்தது.
மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சந்தோஷ் கோவிந்த்ராவ் சப்பல்காவ்ங்கர், மிலிந்த மனோகர் சதாயே ஆகியோருக்கு பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
நிராகரிக்கப்பட்ட 8 பேரில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.கிர்பாலின் மகனும், மூத்த வழக்கறிஞருமான சவுரவ் கிர்பால் பெயரும் அடக்கம்.