அகமதாபாத்: குஜராத் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி நேற்று வழிபட்டார். குஜராத் சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி குஜராத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார்.
அருணாச்சலின் இடா நகர், உ.பி.யில் உள்ள வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் அவர் குஜராத்துக்கு வந்தார். அவரை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில், நேற்று காலை அவர் புகழ்பெற்ற சோம்நாத் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். சிறப்புப் பூஜைகள் முடிந்த பின்னர் அவருக்கு கோயில் பிரசாதங்களை, கோயில் நிர்வாகத்தார் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து வீரவால் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார்.பின்னர் தோராஜி, அம்ரேலி, போடாத் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.