உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்: நீதிபதிகள் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பு நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சங்கர் லால் சர்மா என்பவர் நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜராகி தானே வாதாடினார். கீழமை நீதிமன்றங்களில் தீர்வு கிடைக்காமல் தற்போது உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதாக கூறிய அவர் பல்வேறு ஆவணங்களையும் தாக்கல் செய்தார். ஆங்கிலம் தெரியாத அவர் இந்தியில் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: எங்களுக்கு இந்தி தெரியாது. உச்ச நீதிமன்றத்தின் வழக்காடும் மொழி ஆங்கிலம். நீங்கள் கூறுவதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். உங்களுக்காக ஒரு வழக்கறிஞரை நாங்களே நியமிக்கிறோம். அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார். வழக்கின் அடுத்த விசாரணையை டிச.4-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் மாதவி கூறும்போது, “உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி வழக்கறிஞர் உதவியுடன் வழக்கை நடத்த மனுதாரர் சங்கர் லால் சர்மா சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு உதவ ஒரு வழக்கறிஞரும் முன்வந்துள்ளார். அவர் மனுதாரருடன் கலந்து பேசி வழக்கின் முழுமையான விவரங்கள், ஆவணங்களை பெற்று நீதிமன்றத்தில் வாதாடுவார்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE