பொய் வழக்கில் சிக்க வைத்த மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றம் அனுமதி

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் டார்ன் டரன் நகரைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சிங். இவருக்கும் ராஜ்விந்தர் கவுருக்கும் கடந்த 2009-ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. பெற்றோருடன் வசித்து வந்த ஜோகிந்தர் சிங்கை தனிக்குடித்தனம் நடத்த கட்டாயப்படுத்தி உள்ளார் ராஜ்விந்தர் கவுர். இதை கணவர் ஏற்கவில்லை.

இந்நிலையில், 2013 அக்டோபர் 13-ம் தேதி ராஜ்விந்தர் கவுரை அவரது தந்தை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு கவுர் கணவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து, டார்ன் டரன் மாவட்ட நீதிமன்றத்தில் ஜோகிந்தர் சிங் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் . அதில், “என் மனைவி சிறிய விஷயத்துக்கெல்லாம் என்னுடன் சண்டை போட்டார். எனது பெற்றோரை அவமதித்தார். என் மனைவியின் நாக்கு விஷத்தைக் கக்குகிறது. மேலும் என்னையும் என் குடும்பத்தினரையும் பொய் வழக்கில் சிக்க வைத்தார். அதிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம். எனவே, எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஆனால், கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததால்தான் அவர் மீது வழக்கு பதிவு செய்தேன் என ராஜ்விந்தர் கவுர் கூறியுள்ளார். இருதரப்பு வாதத்தைக் கேட்ட மாவட்ட நீதிமன்றம், திருமணத்தை ரத்து செய்ய முடியாது என 2016 அக்டோபர் 1-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. ஜோகிந்தர் சிங் இந்த உத்தரவை எதிர்த்து பஞ்சாப் அன்ட் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ரிது பாரி மற்றும் நிதி குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜோகிந்தர் சிங், ராஜ்விந்தர் கவுர் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE