அகமதாபாத்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ நேற்று அக்கட்சியை விட்டு விலகி பாஜக. வில் இணைந்தார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியாக உள்ளன.
இந்நிலையில் மூத்த காங்கிரஸ் எம்எல்ஏவும் பழங்குடியின தலைவருமான மோகன் சிங் ரத்வா நேற்று முன்தினம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார்.
10-வது முறையாக எம்எல்ஏவாக இருந்த ரத்வா, வரும் தேர்தலில் தனக்கு பதிலாக தனது மகன் போட்டியிட தாம் விரும்புவதாக கூறினார்.
» மும்பை | கணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் பெண் மரணம்
» அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை பிரதமர் மோடி கண்டுகொள்ளவே இல்லை: கார்கே குற்றச்சாட்டு
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த எம்எல்ஏ பகவான் பரட் நேற்று கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தகோருக்கு கடிதம் அனுப்பினார்.
கிர் சோம்நாத் மாவட்டம், தலாலா தொகுதி எம்எல்ஏவான பகவான் பரட், சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது ஆதரவாளர்கள் 4,000 பேரிடம் ஆலோசித்த பிறகே காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினேன். எவ்வித நிபந்தனையும் இன்றி பாஜகவில் இணைந்துள்ளேன். பாஜக விரும்பினால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன். கிர்சோம்நாத், ஜுனாகத் மாவட்டங்களில் உள்ள 9 தொகுதிகளில் பாஜகவின் வெற்றிக்காக பாடுபடுவேன்” என்று தெரிவித்தார்.