மும்பை | கணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் பெண் மரணம்

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்பாராத அசம்பாவிதமாக தனது கணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் பெண் மரணம் அடைந்துள்ளார். இந்த துயரம் கடந்த திங்கட்கிழமை அன்று மும்பை நகரின் விக்ரோளி பகுதியில் நடைபெற்றுள்ளது.

அந்த பெண்ணின் கணவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த 45 வயதான அவரது கணவர் பினு கோஷி, தனக்கு நெஞ்சு வலிப்பதாக சொல்லியுள்ளார். தொடர்ந்து அவரை அவரது குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார். அந்த செய்தியை அறிந்தது முதல் 43 வயதான பிரமிலா, தொடர்ந்து அழுதுள்ளார்.

அவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் கணவரின் பிரிவை தாங்க முடியாத அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அதே அம்பேத்கர் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரை அக்கம் பக்கத்தில் வசித்து வந்த நபர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாரடைப்பு காரணமாக அவரும் உயிரிழந்துள்ளார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் அடுத்தடுத்து கணவர் மற்றும் மனைவி உயிரிழந்திருப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE