தெலங்கானா | ஏரியில் நீச்சல் பழக சென்ற 5 மாணவர்கள் உயிரிழப்பு: காப்பாற்ற சென்ற ஆசிரியரும் பலி

By செய்திப்பிரிவு

மெட்ச்சல்: தெலங்கானாவின் மெட்ச்சல் மாவட்டம், காச்சிகூடா நேரு நகர் பகுதியில் மதரஸா பள்ளி உள்ளது. இங்கு இஸ்லாமிய மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு படிக்கும் நேரு நகரை சேர்ந்த இஸ்மாயில் (12), ஜாபர் (13), சோஹைல் (14), அயோன் (14), ரியான் (14) ஆகிய 5 மாணவர்கள், நேற்று இதே பகுதியில் உள்ள எர்ரகுண்டா ஏரியில் நீச்சல் பழக சென்றனர். ஆனால், ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால், இவர்கள் தொடர்ந்து நீந்த முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இதை அந்த வழியாக சென்ற, இவர்களின் பள்ளி ஆசிரியர் யோவான் (42) பார்த்தார். உடனே அவர் ஏரியில் குதித்து தனது மாணவர்களை காப்பாற்ற முயன்றார்.

ஆனால், அவரை அனைத்து மாணவர்களும் பயத்தில் பிடித்துக்கொண்டதால், அவராலும் நீந்த முடியாமல் நீரில் மூழ்கினார்.அனைவரும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த, மெட்ச்சல் போலீஸார் உள்ளூர் மக்கள் உதவியுடன் 6 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்குப்பின், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஒரே பகுதியை சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததால், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE