பஞ்சாபில் இந்து அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

அமிர்தசரஸ்: பஞ்சாபில் இந்து உரிமை அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிவசேனா என்ற பெயரில் இந்து உரிமை அமைப்பை சுதிர்சூரி என்பவர் நடத்தி வந்தார். இந்துத்துவா கொள்கைகளை வலியுறுத்தி அவர் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தார்.

இந்நிலையில் அமிர்தசரஸ் நகரிலுள்ள ஒரு கோயிலின் சிலைகள் அண்மையில் சேதப்படுத்தப்பட்டன. கோயில் வளாகத்துக்கு வெளியே குப்பையில் உடைக்கப்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சுதிர் சூரி தலைமையில் சிவசேனா அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுதிர் சூரியை நோக்கி பல முறை சுட்டார். இதில், 2 குண்டுகள் சுதிர் சூரியின் உடலில் பாய்ந்தன. இதனால் படுகாயமடைந்த அவரை சிவசேனா அமைப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப் பிடித்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து துப்பாக்கியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அமிர்தசரஸ் நகர போலீஸ் கமிஷனர் அருண் பால் சிங் கூறியதாவது: துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் சந்தீப் சிங் என்பவர் தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

துப்பாக்கியால் சுட்ட சந்தீப் சிங், மேலும் 3 நபர்களுடன் போராட்டத்துக்கு காரில் வந்து இறங்கியதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். இந்த சம்பவத்தால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களை அமைதி காக்கும்படியும், மத மோதலில் ஈடுபட வேண்டாம் என்றும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த மே மாதம் பஞ்சாபில், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாடகருமான சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது இந்து உரிமை அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளது மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE