ரஷ்யா குற்றச்சாட்டு எதிரொலி | அணுகுண்டு தயாரிக்கிறதா உக்ரைன்? - ஐ.நா. அணுசக்தி ஆணையம் விசாரணை

By செய்திப்பிரிவு

கீவ்: அணுகுண்டுகளை உக்ரைன் தயாரிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அதுதொடர்பான விசாரணையை ஐ.நா. அணுசக்தி ஆணையம் தொடங்கியது.

நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டதால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரியில் போர் தொடுத்தது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் இறங்காவிட்டாலும், உக்ரைனுக்கு ஏராளமான ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் அணு ஆயுதங்களை உக்ரைன் தயாரிப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுடன் கடந்த வார இறுதியில் உரையாடிய ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷாய்கு, தங்கள் மீது‘டர்ட்டி பாம்ஸ்’ எனப்படும் நாசகாரஆயுதங்களை (அணு ஆயுதங்கள்) கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் ஆயத்தமாகி வருவதாக குற்றம் சாட்டினார். அணுக்கதிர் வீச்சுப் பொருள்களால் ஆன அந்த ஆயுதங்கள் மூலம் போரை மிகப் பெரிய அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல உக்ரைன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ரஷ்யாவின் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை கீவ் நகரில், ஐ.நா. அணுசக்தி ஆணையம் நேற்று தொடங்கியது. சர்வதேச அணு சக்தி ஆணையத்தின் தலைவர் ரஃபேல் குரோஸி தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த விசாரணை நிறைவுறும் என்று ரஃபேல் குரோஸி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE