பன்ஸ்வாரா: இனி தேசிய நினைவுச் சின்னமாக மான்கட் தாம் போற்றப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழங்குடியினரின் படுகொலைக்காக மான்கட் தாம் இன்றளவும் நினைவு கூரப்படுகிறது. இது சில சமயங்களில் ‘ஆதிவாசி ஜாலியன்வாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. 1913-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் எல்லையில் உள்ள மான்கட் மலைகளில் நூற்றுக்கணக்கான பில் இன பழங்குடியினரை பிரிட்டிஷ் படைகள் கொன்றன.
இந்த படுகொலையில் மொத்தம்1,500 பழங்குடியினர் கொல்லப்பட்டனர். ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர் இந்த இடத்தை புனிதமான இடமாகப் போற்றுகின்றனர். மேலும் இது பழங்குடியினர் அடையாளத்தின் முக்கிய அங்கமாகவும் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மான்கட் தாம் பகுதி, தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.
» ரஷ்யா குற்றச்சாட்டு எதிரொலி | அணுகுண்டு தயாரிக்கிறதா உக்ரைன்? - ஐ.நா. அணுசக்தி ஆணையம் விசாரணை
இந்நிலையில் நேற்று பன்ஸ்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மான்கட் தாம் பகுதியை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தார்.
ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் இருந்தனர்.
விழாவில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது:
பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு செல்லும்போது, அவருக்கு சிறந்த முறையில் கவுரவம் அளிக்கப்படுகிறது. ஏனென்றால், ஜனநாயகம் ஆழமாக வேரூன்றிய, காந்தியின் தேசத்தில் பிரதமராக உள்ளவர் வந்திருக்கிறார் என்பதற்காகத்தான். அதுபோன்ற நாட்டில் இருந்து பிரதமர் ஒருவர் வருகிறார் என அவர்கள் பெருமையாக உணர்கின்றனர்” என்றார்.
விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, “நான் முதல்வராக இருந்த காலத்தில், அசோக் கெலாட்டும் முதல்வராக இருந்திருக்கிறார். நாங்கள் இருவருமே ஒரே நேரத்தில் முதல்வர்களாக பணியாற்றி இருக்கிறோம். அவர் எங்களுக்கு மிகவும் மூத்தவர்.
தற்போது நாட்டில் முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பவர்களில் மிகவும் மூத்த முதல்வர் என்ற பெருமை அவருக்கு உண்டு” என்றார்.