நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு விரல் சோதனை பாடத்தை நீக்க நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மருத்துவக் கல்லூரி பாடப்புத்தகத்தில் இருந்து, பெண்களின் கன்னித்தன்மையைப் பரிசோதிக்கும் இரு விரல் பரிசோதனை தொடர்பான பாடத்தை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்படும்போது, அப்பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட் டுள்ளாரா என்பதை ஹைமன் எனப்படும் கன்னித்திரை சவ்வை வைத்து தெரிந்து கொள்வதற்காக இரு விரல் பரிசோதனை செய்யும் முறை கடை பிடிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நபர் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, மருத்துவ அறிக்கைக்காக இந்த இரு விரல் பரிசோதனையை செய்து வருகின்றனர். 2018-ம் ஆண்டு ஐ.நா சபை இந்தப் பரிசோதனை முறையை தடை செய்து அறிவித்தது.

அதற்கு முன்னதாகவே, 2014-ம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டோரை விசாரிப்பதற்கு சில வரையறைகளை வகுத்தது. அதில் ‘இருவிரல் பரிசோதனை சட்டவிரோதமானது என்றும், இப்பரிசோதனை மூலம் உண் மையை கண்டறிய முடியாது’ என்றும் குறிப்பிட்டது.

இந்நிலையில்தான் இரு விரல் பரிசோதனை முறை தொடர்பான பாடத்தை மருத்துவக் கல்லூரி பாடத்தில் இருந்து நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டவரை ஜார்க்கண்ட் மாநில உயர் நீதி மன்றம் விடுவித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளியை விடுவிக்கும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, “இரு விரல் பரி சோதனை கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் 2014-ல் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி பாடப் புத்தகங்கள், பாடக்குறிப்புகளில் இருந்து இரு விரல் பரிசோதனை குறிப்புகளை நீக்க வேண்டும். இரு விரல் பரிசோதனை முறை இன்றளவும் நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கது. பெண்ணின் உறுப்பு தளர்ச்சியை சோதிக்கும் செயல்முறை பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது. இரு விரல் பரிசோதனையை நடத்தும் எந்தவொரு நபரும் குற்றவாளியாக கருதப்படுவார்கள்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE