உலகின் பரபரப்பான விமான நிலையங்கள் - 10-ம் இடம் பிடித்த டெல்லி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் டெல்வி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 10-வது இடம் பிடித்துள்ளது.

விமானத் துறை ஆய்வு நிறுவனமான ஓஏஜி, உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2019 அக்டோபர் மற்றும் 2022 அக்டோபர் மாதங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிலவரங்களை ஒப்பிட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் அட்லாண்டா விமான நிலையம் உள்ளது. துபாய் விமான நிலையம் 2-வது இடத்திலும் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் 3-வது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 14-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டு அக்டோபரில் 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பரபரப்பான வழித்தடங்களின் பட்டியலில், மும்பை - துபாய், டெல்லி - துபாய் வழித்தடங்கள் இடம்பிடித்துள்ளன.

கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட போதிலும், 2022-ம்ஆண்டிலே விமான சேவை முழு வீச்சுக்குத் திரும்பியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE