அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று கூறியதாவது:
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் வகையில் உறுதியானதாக இருக்கும். இந்தக் கோயில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்படுகிறது. கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
ராமர் கோயில் 2024 ஜனவரியில் பக்தர்களுக்கு திறக்கப்படும். ஜனவரி மகர சங்கராந்தி நாளில் கருவறையில் குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்ட பிறகு கோயில் திறக்கப்படும். கருவறையில் 160 தூண்களும் முதல் தளத்தில் 82 தூண்களும் இருக்கும். தேக்கு மரத்தால் ஆன 12 நுழைவாயில்களை கோயில் கொண்டிருக்கும். இவ்வாறு சம்பத் ராய் கூறினார்.