ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள சுரங்கங் களில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு நகரங்களில் கடந்த 11-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 13-ம் தேதி ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோய், இந்திராமணி குழுமத்தைச் சேர்ந்த சுனில் அகர்வால் மற்றும் லட்சுமிகாந்த் திவாரி ஆகிய 3 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிலக்கரியை எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சிலர் ஒரு டன்னுக்கு ரூ.25 வீதம் மிரட்டி வசூல் செய்துள்ளனர். இதன் மூலம் தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வசூலாகி உள்ளது. அந்த பணத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததுடன் பினாமி பெயரில் சொத்துகளையும் வாங்கி உள்ளனர்.
அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இடைத் தரகர்கள் கூட்டு சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட முக்கிய தொழிலதிபர் சூர்யகாந்த் திவாரி தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.