முலாயம் சிங் யாதவ் தனித்துவமான தலைவர்: பிரதமர் மோடி புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த முலாயம் சிங் யாதவிற்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் அவர், "முலாயம் சிங் யாதவ் தேசிய அரசியலிலும் சரி, உத்தரப் பிரதேச அரசியலிலும் தனித்துவமாகத் திகழ்ந்தவர். எமர்ஜென்சி காலத்தில் அவர் ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்தார். பாதுகாப்பு அமைச்சராக அவர் வலுவான இந்தியாவுக்காக செயல்பட்டார். நாடாளுமன்றத்தில் அவரது தலையீடுகள் எல்லாம் தொலைநோக்கு பார்வை உடையதாக, தேச நலனை வலியுறுத்துவதாக இருந்தன.

முலாயம் சிங் யாதவ் குறிப்பிடத்தகுந்த நபர். அவர் மிகவும் எளிமையான தலைவராக மக்கள் மனங்களைக் கவர்ந்தார். மக்கள் பிரச்சினைகளுக்கு செவி சாய்ப்பவராக இருந்தார். அவர் மக்களுக்கு தொண்டாற்றினார். வாழ்நாள் முழுவதும் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் ராம் மனோகர் லோஹியாவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்பவராக இருந்தார்" என்று பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் ட்வீட்டில் "ஒரு சகாப்தத்தின் முடிவு" என்று குறிப்பிட்டு முலாயம் சிங்கிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

"உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மறைவுச் செய்தியைக் கேட்டு வருந்தினேன்.அவரது ஆன்மா இறைவனடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்கிறேன்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE