நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கு மேற்கு வங்க சட்ட அமைச்சர் வீடுகளில் சிபிஐ சோதனை

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியும் கால்நடை கடத்தல் வழக்கில் திரிணமூல் மூத்த தலைவர் அனுப்ரதா மோன்டலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கில் மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கொல்கத்தாவில் உள்ள வீடு மற்றும் பஷ்சிம் பர்தமான் மாவட்டம் அசன் சோல் நகரில் உள்ள 3 வீடுகளில் சோதனைநடைபெற்றது. இது தவிர கொல்கத்தாவில் மேலும் 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சோதனைக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர். சோதனையில் பெண் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். நிலக்கரி கடத்தல் ஊழல்வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ஏற்று ஒருமுறை மோலோய் கட்டக் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பிறகு அவர் விசாரணைக்கு ஆஜராக வில்லை. இந்நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “நிலக்கரி கடத்தல் ஊழலில் மோலோய் கட்டக்கின் பெயர் வெளிவந்துள்ளது. இதனால் ஊழலில் அவரது பங்கு குறித்து கண்டறிய வேண்டியுள்ளது. இந்த ஊழலில் கட்டக் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE