உ.பி. மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் தம்பி உடலை கைகளில் தூக்கி சென்ற சிறுவன்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால், இறந்த 2 வயது தம்பியின் உடலை 10 வயது சிறுவன் கைகளில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது.

உ.பி.யின் முசாபர்நகர் அருகில் உள்ள மாவட்டம் பாக்பத். இந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இரண்டாவது மனைவியுடன் வாழ்கிறார் பிரவீண் குமார். கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் 2 வயது குழந்தை கலா குமாரை வளர்க்கும் பொறுப்பு பிரவீணின் இரண்டாவது மனைவிக்கு வந்துள்ளது. ஆனால், குழந்தையை அவர் சரியாக கவனிக்கவில்லை. இதனால், குழந்தை எந்நேரமும் அழுது கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவில் கோபமுற்ற 2-வது மனைவி, குழந்தை கலா குமாரை தன் வீட்டின் முன் நெடுஞ்சாலையில் ஒடிய வாகனத்தின் சக்கரங்களுக்கு இடையே வீசியுள்ளார். இதில் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதற்காக, பிரவீணின் இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை கலா குமாரின் உடற்கூறு ஆய்வு பாக்பத் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது.

இதன் பிறகு குழந்தை உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்ட போது அது கிடைக்கவில்லை. பிறகு தன் தம்பி உடலை அவனது 10 வயது அண்ணன் சாகர் குமார்
வெள்ளைத் துணியால் சுற்றி, கைகளில் தூக்கி சென்றுள்ளான். உடன் பிரவீணும் அவரது உறவினரும் நடந்து சென்றுள்ளனர். அனைவரது கால்களிலும் செருப்புகள் இல்லை. இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக்கி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில், பரிதாபமாக சிறுவன் சாகர் குமார், தன் 2 வயது தம்பி உடலை கைகளில் சுமந்து செல்லும் காட்சிகள் வைரலாயின.

இதுகுறித்து பிரவீண் குமார் கூறும்போது, ‘இங்கிருந்து எனது வீடு சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. நானும் என் குழந்தையின் உடலை பல கி.மீ தூக்கிக் கொண்டு வந்தேன். எனது கைகளில் வலி எடுத்தமையால் எனது மூத்த மகன், சடலத்தை எடுத்து வந்தான். வீடியோ மூலம் இந்த தகவல் கிடைத்து பாக்பத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி விட்டார்’ என்றார்.

இதுகுறித்து பாக்பத் மாவட்ட தலைமை மருத்துவர் உத்தரவின் பேரில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இதுபோல் இறந்த பிறகும் பலருக்கும் ஆம்புலன்ஸ் மறுக்கப்படும் பல மாநிலங்களின் செய்தி அவ்வப்போது வெளியாகி வருகிறது. இவற்றில், இறந்தவர்களின் ரத்த சம்மந்தப்பட்ட உறவுகள் அவர்களது உடலை சைக்கிளிலும், ரிக்ஷாவிலும், தமது தோள்களிலும் சுமந்து செல்வது தொடர்வதையும் அறிய முடிவது பரிதாபக்குரியதாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE