“2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எனது கடைசிப் போராட்டமாக இருக்கும்” - மம்தா பானர்ஜி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: 2024ல் மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜகவை வெளியேற்றுவதுதான் எனது கடைசி போராட்டமாக இருக்கும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பேரணி ஒன்றில் கலந்துகொண்ட மம்தா, "2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் காவி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டமே எனது கடைசிப் போராட்டம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். எப்படியும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்கத்தை காப்பாற்றுவதே எங்களின் முதல் போராட்டம். எங்களை மிரட்ட முயற்சித்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம்.

எல்லோரும் தோல்வியை ருசிக்க வேண்டும். இந்திரா காந்தி வலிமையான அரசியல் தலைவராக இருந்தபோதிலும், தோல்வியை எதிர்கொண்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984ல், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், 1989ல் நடந்த தேர்தலில், தோல்வியை சந்தித்தார். பா.ஜ.கவில் சுமார் 300 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனாலும், பிஹார் இப்போது அவர்களுக்கு இல்லை. பிஹார் பாதையை மேலும் பல மாநிலங்கள் பின்பற்றுவார்கள். தேர்தலுக்கு முன், பாஜகவில் எந்த தலைவர்களும் இருக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE