உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை | வழக்கு விசாரணைகள் நேரலையில் ஒளிபரப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக விசாரணைகள், தீர்ப்புகள் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளன. சுமார் 20 வழக்குகளின் விசாரணையும், தீர்ப்பும் நேரலையில் ஒளிபரப்பப்படுகின்றன.

லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் நேஷனல் இன்ஃபமேட்டிக்ஸ் மையத்தின் வெப்காஸ்ட் போர்டல் வாயிலாக காலை 10.30 மணிக்கு நேரலை தொடங்கியது.

தேர்தல் இலவசங்கள் குறித்த வழக்கின் மீதான உத்தரவு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு இன்று நேரலையில் வெளியாகிறது.

உச்ச நீதிமன்றத்தின் 48வது நீதிபதியான என்வி ரமணாவின் பணிக்காலத்தின் கடைசி நாள் இன்று. ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாளான நேற்று அவர் பிரதமர் பாதுகாப்பு அத்துமீறல், பில்கிஸ் பானு வழக்கு, பெகாசஸ் வழக்கு, இலவசங்கள் தொடர்பான வழக்கு என 4 வழக்குகளை விசாரித்தார். இதில் இலவசங்கள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் இதனை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மாற்றி உத்தரவிடவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 2013ல் இதேபோன்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய மனுவில் கோரப்பட்டுள்ளதால் வேறு அமர்வுக்கு மாற்றலாம் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சில கருத்துகளை முன்வைத்தது. அதில், இலவசங்கள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஏன் ஆலோசனைக் கூட்டம் நடத்தக்கூடாது. தேர்தல் வாக்குறுதி இலவசங்களால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்டாவிட்டால் இதில் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE