உத்தராகண்டில் மேக வெடிப்பு: அதிகாலையில் கடும் வெள்ளப் பெருக்கு; மக்கள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்டில் ராய்பூர் - குமால்டா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”உத்தராகண்டில் ராய்பூர் - குமால்டா பகுதியில் அதிகாலை 2.30 மணிக்கு மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக சாங் நதியில் கட்டப்ப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

சுற்றுலா தலங்கள் பலவற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மால்தேவ்தா, புட்ஸி, தௌலியாகாதல், தத்யுட், லவர்கா, ரிங்கல்காத், துட்டு, ராகத் காவ்ன் மற்றும் சர்கெட் ஆகிய கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளம் காரணமாக ராய்பூர் - குமால்டா தேசிய சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பிற இமாலய மாநிலங்களில் பருவமழைக் காலத்தில் சுற்றுச்சூழலுக்கு சிறிது கவனம் செலுத்தாது பெரிய உயரமான கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் பருவ மழை காலங்களில் பெரும் பேரழிவு ஏற்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தராகண்டில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் 6,000 பேர் பலியாகினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE