10 ரூபாய் கட்டணத்தில் கொச்சி மெட்ரோவில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம்

By செய்திப்பிரிவு

கொச்சி: நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொச்சி மெட்ரோவில் பயணிகள் வெறும் 10 ரூபாய் மட்டுமே செலுத்தி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது Freedom To Travel என்ற ஆஃபரின் கீழ் இன்று ஒருநாள் மட்டும் வழங்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் ஆண்டை கொண்டாடும் விதமாக அரசு நாட்டு மக்களுக்கு சில சலுகையை அறிவித்துள்ளது.

பாரம்பரிய நினைவுச் சின்னங்களை இலவசமாக பொதுமக்கள் பார்வையிடுவது அதில் ஒன்றாகும்.

இந்நிலையில், கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் மெட்ரோ பயணிகளுக்கென சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ‘Freedom To Travel’ என அறியப்படும் இந்த சலுகையின் கீழ் சுதந்திர தின நாளான இன்று ஒருநாள் மட்டும் 10 ரூபாய் கட்டணத்தில் பயணிகள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் ஒரு நெடும் பயணம் உள்ளது என்பதை குறிப்பிடும் வகையில் இது அமைந்துள்ளது.

“காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் யார் வேண்டுமானாலும் சுதந்திர தினத்தன்று வெறும் 10 ரூபாய் கட்டணத்தில் கொச்சி மெட்ரோவில் பயணிக்கலாம்.

அத்தோடு பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் சுமார் பத்தாயிரம் கை பைகளை பயணிகளுக்கு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என கொச்சி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE