அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவு

By செய்திப்பிரிவு

மும்பை: பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 87.

ஆகாசவானி வானொலி செய்திகளில் 1980, 90களில் தமிழர்களை வசீகரித்த குரலுக்கு சொந்தக்காரர் இந்த சரோஜ் நாராயணசுவாமி. ஆகாசவானி வானொலி யில் தினமும் காலை 7.15 மணிக்கு ஒலிக்கும் அவரின் குரல் மூலமே உலக நடப்புகளை அறிந்தவ தமிழர்கள் ஏராளம். தமிழத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் பிறந்து, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் படித்து வளர்ந்தார் சரோஜ் நாராயணசுவாமி.

ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்ற சரோஜ் நாராயணசுவாமி, தாய் மொழியான தமிழில் நல்ல புலமையும் திகழ்ந்தார். திருமணத்துக்கு பின்பே வானொலி பணியில் இணைந்து அதற்காக மும்பையில் இருந்து டெல்லிக்கும் குடியேறினார். பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இவர், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரசிம்மராவ் உள்ளிட்டோரை நேர்காணல் செய்துள்ளார்.

1962ல் வானொலி பணியில் சேர்ந்த சரோஜ் நாராயணசுவாமி, அந்த பணியில் சுமார் 35 ஆண்டுகாலம் தமிழ் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனுபவம் கொண்டுள்ளார். அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

ஒலிபரப்புத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி 2008ல் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. பணி ஓய்வுக்கு பின் தான் வளர்ந்த நகரமான மும்பையில் வசித்து வந்த அவர் இன்று காலமானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE