நியாய விலை கடை டீலருக்கு ஆதரவாக பிரதமர் மோடியின் சகோதரர் தர்ணா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, அகில இந்திய நியாய விலைக் கடை டீலர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் பகுதியில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் பிற உறுப்பினர்களுடன் பிரகலாத் மோடியும் பங்கேற்றார்.

பிரகலாத் மோடி கூறும்போது, “எங்களின் நீண்டகால கோரிக்கைகளை பட்டியலிட்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் எங்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மனு அளிக்கவுள்ளனர். வாழ்க்கை செலவு மற்றும் கடைகளை நடத்துவதற்கான செலவு அதிகரித்துள்ள வேளையில் எங்களுக்கு வழங்கப்படும் தொகையை கிலோவுக்கு 20 பைசா மட்டுமே அதிகரித்திருப்பது கொடூர நகைச்சுவையாக உள்ளது. எங்ளுக்கு நிவாரணம் வழங்கவும் எங்கள் நிதி நெருக்கடியை போக்கவும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்றார். கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் விஸ்வம்பர் பாசு கூறும்போது, “மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை புதன்கிழமை (இன்று) சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அரசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கும்போது இழப்பு ஏற்படுகிறது. அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அந்த கூட்டமைப்பு கோரி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE