கோவிட் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டால் இலவச சோலே பட்டூரே: சண்டிகர் தெருவோர வியாபாரி தாராளம்

By செய்திப்பிரிவு

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தனது கடையில் இலவசமாக சோலே பட்டூரே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார் சண்டிகரைச் சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர். இவர் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இலவசமாக சோலே பட்டூரே வழங்கி பிரதமர் மோடியிடம் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சஞ்சய் ராணா சிங் ஜியின் கடையில் சோலே பட்டூரே சாப்பிட வேண்டுமென்றால் நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அந்த குறுந்தகவலை அவரிடம் காட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.

சஞ்சய் ரானா என்ற 45 வயது வியாபாரி தற்போது மீண்டும் தடுப்பூசிக்கு இலவச சோலே பட்டூரே அறிவித்துள்ளார். இந்த முறை கோவிட் பூஸ்டர் தடுப்பூசிக்கு அவர் இதனை அறிவித்துள்ளார். இவர் 15 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு இவரது மகள் ரித்திமாவும், மருமகள் ரியாவும் இந்த யோசனையை சஞ்சய்க்கு கூறினர். அதன்படியே இவர் இத்திட்டத்தை அறிவித்தார்.

இது குறித்து சஞ்சய் ரானா, ”பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடைய அனைவரும் தயக்கமின்றி முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சமீபமாக நாடு முழுவதும் லேசாக தொற்று அதிகரிக்கிறது. ஆகையால் நிலைமை நம் கைமீறி செல்வதற்கு முன்னால் நாம் தற்காப்பை நாட வேண்டும். ஏப்ரல், மே 2021ல் நடந்த சம்பவங்களை நினைவில் கொண்டு பாடங்களைக் கற்றவர்களாக நடந்து கொள்ள வேண்டும். கடந்த முறை தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு 7 மாதங்கள் வரை இலவச சோலே பட்டூரே வழங்கினேன். இந்த முறை நான் 6 வாரங்கள் வரை இதனை வழங்கவுள்ளேன். இது போன்று தடுப்பூசி செலுத்துவதற்கு ஊக்குவிப்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது” என்று கூறியுள்ளார்.

ரானா 10 ஆம் வகுப்பு வரையில் மட்டுமே படித்துள்ளார். அவரது சொந்த ஊர் இமாச்சலப் பிரதேசம். இவரது மனைவி இல்லத்தரசியாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தன் மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே தனது லட்சியம் என்று ரானா கூறுகிறார்.

கடந்த ஜூலை 15 ஆம் தேதி மத்திய அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஜூலை 15 தொடங்கி 75 நாட்களுக்கு தகுதியுடைய அனைவருமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான 68,97,62,152 பேரில் 7,30,96,284 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE