தேதியின் சிறப்பு: தொடர்ச்சியாக ஜூலை 25-ல் பதவியேற்கும் 10-வது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

By செய்திப்பிரிவு

புது டெல்லி: இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்க உள்ளார் திரவுபதி முர்மு. அவர் பதவி ஏற்க உள்ள ஜூலை 25-ம் (இன்று) தேதியான அதே தேதியில் இதற்கு முன்னர் குடியரசுத் தலைவராக பதவி வகித்த ஒன்பது பேர் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இப்போது பத்தாவது குடியரசுத் தலைவராக இணைகிறார் திரவுபதி முர்மு.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் திரவுபதி முர்மு. 64 சதவீத வாக்குகளை இந்தத் தேர்தலில் பெற்றிருந்தார் அவர். அவரது வெற்றிக்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என அறியப்படுகிறார்.

இந்நிலையில், அவர் பதவி ஏற்றுக் கொள்ள உள்ள ஜூலை 25-ம் தேதியன்று இதற்கு முன்னதாக ஒன்பது பேர் குடியரசுத் தலைவர்களாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த வழக்கம் கடந்த 1977 முதல் தொடர்ந்து வருகிறது. இது எழுதப்படாத விதியாக இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் கடந்த 1950, ஜனவரி 26 அன்று பதவி ஏற்றுக் கொண்டார். 1952 மற்றும் 1957 என தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றார். 1962, மே 13 அன்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் மூன்று குடியரசு தலைவர்கள் வெவ்வேறு தேதிகளில் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இருப்பினும் கடந்த 1977 முதல் சொல்லி வைத்தது போல ஜூலை 25-ம் தேதி அன்று புதிய குடியரசுத் தலைவர்களாக தேர்தலில் தேர்வானவர்கள் பதவியேற்றுக் கொண்டு வருகின்றனர். நீலம் சஞ்சீவ ரெட்டி, செயில் சிங், ராமசாமி வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அதே ஜூலை 25 அன்று பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இப்போது திரவுபதி முர்முவும் அதே தேதியில் பதவி ஏற்றுக் கொள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE