உ.பி மதரஸாக்களின் நிதி விவரங்கள் கணக்கெடுப்பு: முதல்வர் யோகி அரசின் முக்கிய முடிவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் மதரஸாக்களின் நிதி விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது. இதில், அரசு அங்கீகாரம் பெற்றவை, அரசு நிதி பெற்றவை மற்றும் பெறாதவைகளும் அடங்கும்.

இந்தியாவில் அரசு அங்கீகாரம் பெற்ற 19,132 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில், மிக அதிகமாக பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சுமார் 16,500 மதரஸாக்கள் அரசு நிதிஉதவி பெற்று செயல்படுகின்றன.

இதுமட்டுமின்றி, அரசு அங்கீகாரம் பெறாத மதரஸாக்களின் எண்ணிக்கை உத்தரப் பிரதேசத்தில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இவைகளுக்கான நிதி உதவி எங்கிருந்து வருகிறது என்ற விவரங்கள் வெளியில் தெரிவதில்லை. இதுபோன்ற விவரங்களை தொகுத்து வெளிப்படையாக அறிவிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு விரும்புகிறது. இதற்காக அம்மாநில அரசின் மதரஸா வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் உத்தரப்பிரதேச மதரஸா வாரியத்தின் தலைவரான இப்திகார் அகது ஜாவீத் கூறுகையில், ‘உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களுக்கு கிடைக்கும் நிதி விவரங்களை அறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அனைத்து வகை மதரஸாக்களிலும் நடைபெறும் இந்த கணக்கெடுப்பின் மூலம், நிதி அளிப்பவர்கள் விவரங்கள் தெரியும். இந்த விவரங்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்படும்’எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மதரஸாக்களில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் தாமதமாக சேர்க்கின்றனர். இதில், அக்குழந்தைகளின் வயது வரம்பு நிர்ணயிக்கப்படாமல், தவறாகக் குறிப்பிடப்பட்டு விடுகின்றன. இதற்கான ஒரு கால வரையறையும் நிர்ணயிக்க உபி அரசு முடிவு செய்துள்ளது. அதுபோல், பல புதிய விதிமுறைகளை வரையறைத்து மதரஸாக்களை ஒழுங்குபடுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு விரும்புகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE