உடுப்பி: கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடி ஒன்றின் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் நான்கு பேர் பலியாகினர். இந்த கோர விபத்தின் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் இயங்கி வரும் சுங்கச்சாவடி மையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கடலோர பகுதியான ஷிரூரில் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில், மாலை 4 மணி அளவில் ஆம்புலன்ஸ் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க முயன்றுள்ளது.
அதை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இதனைச் செய்துள்ளனர். மூன்று தடுப்பு கட்டைகளில் இரண்டு அகற்றப்பட்டுள்ளது. மற்றொன்றை சுங்கச்சாவடி ஊழியர் அகற்றிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது.
சாலையில் இருந்த மழை நீர் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனத்தின் டையருக்கும், சாலைக்குமான பிடிமானம் தளர்ந்துள்ளது. அதனால் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கியபடி (ஸ்கிட்) சுங்கச்சாவடியில் இருந்த கேபின் ஒன்றில் மோதியுள்ளது.
» ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு விண்ணப்பங்களில் இனி இறுதிநாள் வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்’
» அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை: ஸ்மிருதி இரானி
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பயணித்த நோயாளி, அவருடன் இருந்த இரண்டு அட்டண்டர் மற்றும் ஓட்டுநர் என நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வீடியோவை மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.