பாஜகவின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆளும் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். ஜூலை18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிது. இதனைத் தொடர்ந்து துணை குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் மீண்டும் வெங்கய்ய போட்டியிட வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்பட்டது. மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் போன்ற பலர் வேட்பாளர் பரிசீலனையில் இருந்தனர்.

ஆனால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் போன்றோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதை முறைப்படி அறிவித்த பாஜக தேசிய தலைவர் நட்டா, "ஜெகதீப் தங்கர் ஒரு விவசாயியின் மகன். தனது திறமையால் மக்களின் ஆளுநராக உயர்ந்தவர்" என்று பெருமைப்படுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE