குதிரையில் பயணித்த மும்பை நபரை அடையாளம் கண்டது ஸ்விகி:  யார் அவர்?

By செய்திப்பிரிவு

புது டெல்லி: குதிரையில் பயணித்த மும்பை நபரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்து வரும் ஸ்விகி நிறுவனம். அவர் யார் என பார்ப்போம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மழைக்கு நடுவே ஸ்விகி நிறுவன பையை மாட்டிக்கொண்டு குதிரையில் ஒரு நபர் சென்றிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. முதலில் அந்த நபர் ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உணவு டெலிவரி ஊழியர் என சொல்லப்பட்டது. ஸ்விகி நிறுவனமும் அவரை தேடியது.

அதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அதில் தோல்வியை தழுவியதாக ஸ்விகி தெரிவித்தது. மேலும், அவரை அடையாளம் காண உதவுபவர்களுக்கு 5000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்தது ஸ்விகி. இந்நிலையில், இப்போது அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனை கடிதம் மூலம் உறுதி செய்துள்ளது அந்நிறுவனம்.

அந்த குதிரையை ஓட்டி சென்றவரின் பெயர் சுஷாந்த். மும்பையை சேர்ந்த அவருக்கு வயது 17. மும்பை நகரில் திருமண அழைப்பு நிகழ்வுகளில் ஊர்வலமாக செல்லும் குதிரைகளை பராமரித்து வரும் பணியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களிடமிருந்து ஏதேனும் பொருட்களை இரவலாக வாங்கும் பழக்கம் கொண்டவர். இருந்தாலும் அதை திரும்ப தர மறந்துவிடுவாராம். அது போல தான் அவர் ஸ்விகி பையை வாங்கி சென்றுள்ளார். இந்த வீடியோ எடுக்கப்பட்ட போது அவர் வைத்திருந்த ஸ்விகி பைக்குள் குதிரைகளை அழகுப்படுத்த பயன்படுத்தும் எம்பிராய்டரி பொருட்களை இருந்துள்ளன. அவர் பயணம் செய்த குதிரையின் பெயர் சிவா என ஸ்விகி தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவை காரில் இருந்து எடுத்தது அவி எனும் இளைஞரும், அவரது நண்பரும். ஸ்விகி அறிவித்துள்ள 5000 ரூபாய் சன்மானத்தையும் அவர்கள் பெற்றுள்ளதாக தெரிகிது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE