சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ராகுல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே, பாட்னாவில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு மாடிப்படியில் இருந்து லாலு பிரசாத் தவறி விழுந்ததில் அவரது கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் எலும்பு முறிவு, காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பாட்னாவில்உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், லாலு பிரசாத்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் உயர்சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலுவுக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடமும் அவரது உடல்நலம் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார். அப்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE