ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீர் புகை: டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

By செய்திப்பிரிவு

டெல்லியில் இருந்து ஜபல்பூருக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென்று புகை கிளம்பியதால் விமான அவசரமாக மீண்டும் டெல்லிக்கே திரும்பியது.

விமானத்தில் திடீர் புகை கிளம்பியபோது விமானம் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன செய்தித்தொடர்பாளர், டெல்லியில் இருந்து இன்று காலை ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று இன்று காலை ஜபல்பூர் நோக்கி புறப்பட்டது. விமானம் மேலெழும்பிய சில நிமிடங்களிலேயே உள்ளே கேபினில் இருந்து புகை கிளம்பியது. இதனையடுத்து விமானம் அவசரமாக மீண்டும் டெல்லிக்கே திருப்பி வரவழைக்கப்பட்டது என்றார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 15 நாட்களில் ஸ்பைஸ் ஜெட் விமானம் இதுபோன்று அவசரமாக தரையிறங்குவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று டெல்லி நோக்கிச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 185 பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தில் பறவை மோதியதால் இடதுபுற இன்ஜினில் தீப்பற்றியது. 185 பேருடன் சென்ற அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்ட விமானியால் பயணிகள் தப்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE