சிக்கலில் மகாராஷ்டிர அரசு; மோதும் பாஜக - சிவசேனா: சட்டப்பேரவையில் எண்ணிக்கை நிலவரம் என்ன?

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் சூரத் நகரில் முகாமிட்டுள்ள நிலையில் ஆளும் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு எந்த அணிக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநில சட்டமேலவைக்கு நேற்று நடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் சிவசேனா எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மகாராஷ்டிராவில் எம்எல்சி தேர்தலில் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்த சிவசேனா அமைச்சர் மற்றும் 13 எம்எல்ஏக்கள் சூரத் நகருக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக ஆட்சியமைக்குமா என்றும் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் எந்த அணிக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மகாராஷ்டிர சட்டசபையில் மொத்தம் உள்ள 288 எம்எல்ஏக்களில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களும், சிவசேனா 55 பேரும், தேசியவாத காங்கிரஸுக்கு 51 எம்எல்ஏகள் ஆதரவும், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதர கட்சிகள், சுயேட்சைகள் மொத்தம் 29 பேர் உள்ளனர்.

அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே: பழைய படம்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் மொத்த பலம் 288 ஆக உள்ள நிலையில் ஒரு எம்எல்ஏ இறந்ததால், எண்ணிக்கை 287 ஆகக் குறைந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு இப்போது 144 ஆக உள்ளது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி அரசுக்கு தற்போது 152 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதில் சிவசேனாவுக்கு உள்ள 55 எம்எல்ஏக்களில் 21 எம்எல்ஏக்களும், ஒரு சுயேட்சையும் சூரத் ஹோட்டலில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார்

அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான இந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், சிவசேனாவின் எண்ணிக்கை 34 ஆக குறையும். இது சபையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியின் பலத்தை 131 ஆகக் குறைக்கும். 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதால், சபையில் புதிய பெரும்பான்மை 133 ஆக இருக்கும்.

அதேசமயம் பெரும்பான்மையை விட 135 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக பாஜக கூறிவருகிறது. ஆனால் இந்த 21 சிவசேனா எம்எல்ஏக்களும் கட்சித் தாவினால் அவர்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE