மாநிலங்களவைத் தேர்தல்: மகராஷ்டிராவில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸுக்கு வாக்களிக்க ஒவைசி கட்சி முடிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மகராஷ்டிராவில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸுக்கு வாக்களிக்க ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 எம்பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 16 எம்பி பதவிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

மகராஷ்டிராவில் 6 எம்பி, பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக 2,சிவசேனா ஒரு எம்பி, பதவியை எளிதாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 3 எம்பி பதவிகளுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் அவுரங்காபாத் மாநிலங்களவை உறுப்பினர் இம்தியாஸ் ஜலீல் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்களது, ஏஐஎம்ஐஎம் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்களையும், மகராஷ்டிரா மாநிலங்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஷயார் இம்ரானுக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளோம்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு எங்களுடைய வாழ்த்துகள். பாஜகவை வீழ்த்த எங்கள் கட்சியின் தேசிய தலைமை, மகா விகாஸ் அகாதியை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான எங்களது வேறுபாடு மகா விகாஸ் அகாதியில் அங்கம் வகிக்கும் சிவசேனை கட்சியுடன் தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர், மகராஷ்டிரா மாநிலங்களவைத் தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தேர்தல் நடைமுறைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE