மருத்துவர் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காலியாகவுள்ள முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மருத்துவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்காக நீட் தேர்வுநடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இடஒதுக்கீடுப்படி கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மத்திய அரசு ஒதுக்கீட்டில் பல இடங்கள் காலியாக உள்ளன. அதன்படி, நடப்பு கல்வியாண்டான 2021-22 அமர்வில் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 1,456 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலி இடங்களை மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு வழங்க தமிழகம் உள்பட பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நேற்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மருத்துவ கவுன்சிலும் மத்திய அரசும் டாக்டர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

காலியாகவுள்ள 1,456 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை ஏன் மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலிங் குழுவும் (எம்சிசி) இன்னும் நிரப்பவில்லை? இதற்காக மற்றொரு சுற்று கவுன்சிலிங்கை நடத்தலாம்.

காலியாக ஒரு இடம் இருந்தாலும் அதை நிரப்ப வேண்டும். அதை வீணாக்கக்கூடாது” என்று தெரிவித்தனர். நேற்றைய விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் இந்த வழக்கில் ஆஜராகாத நிலையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள் மேலும் கூறும்போது, “மருத்துவச் சேர்க்கையில் இது மிகவும் முக்கியமான விவகாரமாக உள்ளது. ஒரு தனி அதிகாரியால் மத்திய அரசு நடத்தப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் இந்த வழக்கில் ஏன் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அவர் நாளை (இன்று) இந்த வழக்கில் ஆஜராக வேண்டும்" என்று தெரிவித்தனர்.

மேலும் வழக்கை வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலிங் குழுவும் தங்களது வாதங்கள் தொடர்பான கருத்துகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE