பாடகர் சித்து மூஸ் வாலா உடல் தகனம்: இறுதிச் சடங்கில் குவிந்த ரசிகர்கள், பொதுமக்கள்

By செய்திப்பிரிவு

பாடகர் சித்து மூஸ் வாலா உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அவரது ரசிகர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ் வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) படுகொலை செய்யப்பட்டார். சித்து மூஸ் வாலா பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகர். பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். பிரபல பஞ்சாபி பாடகரும் ராப் பாடகருமான சித்து மூஸ் வாலா. அவருக்கு பணம் பறிக்கும் கும்பல்கள் பல தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தன. இதில் முக்கியமான கும்பலாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கருதப்படுகிறது. இந்நிலையில், காரில் சென்று கொண்டிருந்த சித்து மூஸ் வாலாவை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

முன்னதாக, மூஸ் வாலாவின் தந்தையிடம் உடற்கூறாய்வு முடிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அவருடைய உடல் மூஸா கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு இன்று (மே 31) அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதனையொட்டி, சித்து மூஸ் வாலாவின் ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் மூஸா கிராமத்தில் குவிந்தனர். மூஸ் வாலாவின் குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

சித்து மூஸ் வாலா படுகொலை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷனை அமைத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE