காஷ்மீர் பாரமுல்லாவில் என்கவுன்ட்டர்: பாக். ஆதரவு 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் நஜிபாத் என்ற இடத்தில் நேற்று காலை ராணுவத்தினரும் போலீஸாரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஓரிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்தார்.

இதனிடையே, ஸ்ரீநகரில் அஞ்சர் சவுரா பகுதியில் தனது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் மாலை நடந்து சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் சபியுல்லா காத்ரி என்பவரையும் அவரது 9 வயது மகளையும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சபியுல்லா காத்ரி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பான எதிர்ப்பு முன்னணி இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE