உலக சுகாதார நிறுவன விருது பெற்ற ஆஷா பணியாளர்களுக்கு பிரதமர் பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆரோக்கியமான இந்தியாவை உறுதி செய்வதில் ஆஷா சுகாதாரப் பணியாளர்கள் முன்னணியில் உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்திய கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளுக்கு நேரடி அணுகலை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்ததற்காகவும், நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த உதவியதற்காகவும் ஆஷா பணியாளர்ளுக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) நேற்று முன்தினம் விருதை வழங்கியது. இந்த டபிள்யூஎச்ஓ-வின் இயக்குநர்-ஜெனரல் உலக சுகாதார தலைவர்கள் விருது ஆஷா பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆஷா பணியாளர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பின் விருது ஆஷா பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்காக ஆஷா பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள். சுகாதாரமான இந்தியாவை உறுதி செய்வதில் ஆஷா பணியாளர்கள் முன்னணியில் உள்ளனர். அவர்களது அர்ப்பணிப்பும் உறுதியும் போற்றத்தக்கது.

இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE